13ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும்; ஜனாதிபதி


- அதிகாரங்களைப் பகிரத் தயார்; நீதியரசர் குழாமின் தீர்ப்புக்கமைய செயற்படுவேன்

- நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த நான் கட்டுப்பட்டுள்ளேன்.

- காணி ஆணைக்குழுவை ஸ்தாபித்து, தேசிய காணிக் கொள்கையை நடைமுறை


கொழும்பு 29

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைகின்றபோது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டன. 

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் அதிகமான காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. தற்போது சுமார் 3000 ஏக்கர் வரையான காணிகளே  மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எஞ்சிய காணிகளையும் பகிர்ந்தளிப்பதற்கான பொறுப்பை நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்க வேண்டும். அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கமைய அவ்விடயம் தொடர்பில் நாம் செயற்பட வேண்டும். பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் கலந்துரையாடியே நாம் காணிகளைப் பகிர்ந்தளித்தோம்.

அத்துடன், காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதில் மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். 

அதன் பின்னர் தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்ப்பு இருந்தால், அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து அதனை தோற்கடிக்க முடியும். இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்தாக வேண்டும்.

நான் இதுகுறித்த யோசனைகளை எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். இதில் உங்களின் கருத்துக்களையும் 04 ஆம் திகதிக்கு முன்னர் என்னிடம் முன்வைத்தால், அவற்றையும் இணைத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்வோம்.

இந்த கூட்டத்தில் வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்தன தேரர், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விஜயதாச ராஜபஷ, பவித்ரா வன்னியாரச்சி, டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்தன, துமிந்த திசாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.எ சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சி.வி விக்னேஸ்வரன், சுரேன் ராகவன்,  சரத் வீரசேகர,  சிவநேசத்துறை சந்திரகாந்தன், சாகர காரியவசம், டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம் அதாவுல்ல, ரிஷாட் பதியூதீன், இம்ரான் மஹருப் உள்ளிட்ட பாராளுமன்ற கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ( tkn)






Post a Comment

Previous Post Next Post