புத்தளம் - மதுரங்குளி, பாலசோலை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் குடும்பத்தோடு தங்கியிருந்து வேலை செய்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முஹம்மது ஹனீபா முஹம்மது ஹூஸைன் எனும் 62 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவியின் பிறந்தநாள் தினமான புதன்கிழமை இரவு குறித்த நபர், தனது வீட்டிற்கு முன்னால் உள்ள மரமொன்றி சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்த மதுரங்குளி பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணங்கள் பற்றி தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
குறித்த நபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரிபாக் -
