MUNDEL | NEWS By: என். எம்.ஹபீல் (கபூரி, JP)
புதுக்குடியிருப்பு, அல்மினா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை (25) பாலர் பாடசாலையின் ஆசிரியை எம். ஐ. எப். ரிப்கா தலைமையில் புதுக்குடியிருப்பு சுபர் சிக்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாலர் பாடசாலை மாணவர்களுக்கு தமது கணித அறிவு, சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த சந்தை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த சிறுவர் சந்தையில் சிறுவர்கள் தத்தமது வீட்டுத்தோட்டத்து காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் பெற்றோர்கள், நலன் விரும்பிகள், ஊர் மக்கள் என அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்
சிறுவர்களின் அறிவு ஆற்றலை மேம்படுத்தி செயற்பாட்டு திறன்மிக்கதாக கொண்டு வரும் நோக்கோடு வியாபாரம் மற்றும் பொருளாதாரம் ரீதியாக சிறார்களை செயற்பட தூண்டுதலை நோக்காக கொண்டு இச் சிறுவர் சந்தை வருடா வருடம் நடைபெற்று வருவதாகவும் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை பெற்றோர்களுடன் இணைந்து எமது பாலர் பாடசாலையின் நிர்வாகம் வழங்கி வருகின்றதனையும் பாடசாலையின் பொறுப்பாசிரியை சுட்டிக்காட்டினார்.
மேலும், இப் பாலர் பாடசாலையில் கல்விச் சுற்றுலா, தரம் முதலாம் ஆண்டு செல்வதற்கான பிள்ளைகளை தயார் படுத்தல் என மாணவர்களுக்கு தேவையான முழுமையான பயிற்சிகளையும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை வருகை தந்த சகலரும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
இந்நிகழ்வில் கலந்து பங்கேற்க பாலர் பாடசாலை சிறார்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.







