ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் - இரணவில பகுதியை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர் கமல் பியங்கர நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை காலமானார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது இவருக்கு 65 வயதாகும். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையிலேயே இவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 25 வருடங்களுக்கு மேல் பிரதேச ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் அமரர் கமல் பியங்கர, சிலாபம், மாதம்பை உள்ளிட்ட பிரதேசங்களில் நடக்கும் குற்றம், விபத்து மற்றும் வைத்தியசாலைகளில் குறைபாடுகள், பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஆகிய ஊடகங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார்.
அன்னாரின் மரணம் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அன்னாரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.
அன்னாரது பூதவுடன் சிலாபம் - இரணவில பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை செவ்வாய்க்கிழமை (25) மாலை 4 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.