கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் மூலம் கடத்தி நியாயமற்ற முறையில் அடைத்து வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (28.06.2024) மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
இந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்பு நிற டிஃபென்டர் ஜீப்பில் வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக அமில பிரியங்கர, ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 8 பேருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கின் பிரகாரம் மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
