திடீர் தீவிபத்தினால் சேதமடைந்த தளுபொதகம வரலாற்று முக்கியத்துவமிக்க புராதன பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் இன்று (20) நேரில் பார்வையிட்டார்.
கி.பி. 1702ம் ஆண்டளவில் கீர்த்தி ஶ்ரீ ராஜங்க மன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தளபொதகம புராதன பொத்குல் விகாரையின் பிக்குமார் விடுதி கடந்த 18ம் திகதி திடீர் தீவிபத்தினால் சேதமடைந்திருந்தது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விகாரையானது, 1886ம் ஆண்டு புனித திரிபீடகம் பாதுகாக்கப்பட்ட எட்டு விகாரைகளில் ஒன்றாகும் என்று வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விகாரையின் விகாராதிபதி சாஸ்திரபதி வெலிபிடியே பஞ்ஞாசார தேரரைச் சந்தித்து , தீயினால் ஏற்பட்ட சேதங்களைக் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
தீ விபத்தினால் ஏராளமான புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் நாசமாகி உள்ளதாகவும், விகாரையின் சீரமைப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநர் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்மை குறித்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
விகாரையின் சேதங்களை சீரமைப்பதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஆளுநர், சேதமதிப்பீடு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை ஒன்றையும் உடனடியாக தமக்குப் பெற்றுத் தருமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் மட்டுமன்றி தேவையேற்பட்டால் ஜனாதிபதி நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொடுக்கவும் தான் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆளுநர் நஸீர் அஹமட் இதன்போது உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன உள்ளிட்ட பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
- ஊடகப்பிரிவு -





