தனது மைத்துனரை கொலை செய்தவர் கைது...!

ரிபாக், கற்பிட்டி நிருபர்

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசிரிகம தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி - குறிஞ்சம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கற்பிட்டி - ஆசிரிகம கத்தோலிக்க தேவாலயத்தின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளதுடன், இரவு உணவிற்காக தனது மனைவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கும் வந்துள்ளார்.

இதன்போது, உயிரிழந்த நபருடைய மனைவியின் மற்றொரு சகோதரன் அந்த இடத்திற்கு வந்து தகராறு செய்ததாகவும், அதைத் தீர்க்க முயன்றபோதே மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அவரைக் குத்திக் கொலை செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபரின் மைத்துனரான 28 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post