ரஸீன் ரஸ்மின்
வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு சென்ற முஸ்லிம் மக்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்த அம்மக்களை கௌரவமாக வாழ வைத்த புத்தளம் மாவட்ட மக்களை தேசிய மீலாத் விழாவில் கௌரவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் அதிகமானோர் புத்தளம் மாவட்டத்திற்கு இடம்பெயந்தனர்.
உடுத்திய உடையுடன் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறி புத்தளத்திற்கு வந்த வடக்கு முஸ்லிம்களை, புத்தளம் மக்கள் அன்போடு வரவேற்று, அந்த மக்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கி வடக்கு முஸ்லிம் மக்களை கௌரவப்படுத்தினார்கள்.
இவ்வாறு வடக்கு முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வழங்கி கௌரவித்த புத்தளம் மக்களை கௌரவிக்க வேண்டும் என தேசிய மீலாத் விழா தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில், புத்தளத்தில் உள்ள சகல மக்களையும் தனித்தனியாக கௌரவிக்க முடியாது என்பதால் புத்தளம் மக்கள் சார்பாக புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மற்றும் புத்தளம் மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் அழைத்து ஜனாதிபதி முன்னிலையில் அவ்விருவரையும் கௌரவிக்கவுள்ளோம் என்றார்.
தேசிய மீலாத் விழா இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அழைப்பின் பெயரில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
