அரசுக்கு எதிரான ஹர்த்தால்: புத்தளமும் முடங்கியது

அரசாங்கத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக புத்தளம், கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளன.


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக விலக கோரி நாடு முழுதும் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றன.


இந்த நிலையில் புத்தளத்திலுள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு, நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு தமது முழுமைiயான ஆதரவினை வழங்கி வருகின்றனர்.


அத்துடன், அரச மற்றும் தனியார் வங்கிகளும் மூடப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. எனினும் குறைந்த அளவிளான ஆசிரியர்கள் சமூகமளித்தமையால் குறித்த பாடசாலைகளை நடத்த முடியாத நிலை காணப்பட்டதாக அதிபர்கள் தெரிவித்தனர்.


இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும் அரச உத்தியோகத்தர்கள் வருகை தராமையினால் குறித்த அரச அலுவலகங்கள், அரச திணைக்களங்கள் என்பன இன்று இயங்க முடியாத நிலை காணப்பட்டது.

 
அத்துடன், புத்தளம் மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் எதுவும் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை. எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மாத்திமே உள்ளுர் சேவையில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

 
இதனால், வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு என வருகை தந்த பயணிகள் இன்றைய தினம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.


- சாஹிப் -












Post a Comment

Previous Post Next Post