ஜூட் சமந்த
சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனமொன்று, இன்று (14) திங்கட்கிழமை ஆராச்சிக்கட்டுவ பகுதியில் திடீரென வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முந்தல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் குறித்த தீயணைப்பு வாகனம் இன்று (14) திங்கட்கிழமை முந்தல் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வைத்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியிலேயே தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
வீதியில் ஆபத்தான முறையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும், சிறிய ரக லொறி ஒன்றையும் மோதிவிடக் கூடாது என்பதற்காக, தீயணைப்பு வாகனத்தின் சாரதி எடுத்த முயற்சியின் காரணமாக குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நடுவீதியில் கவிழ்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளான போதிலும், தீயணைப்புப் படையினர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

