சிலையை தாய் என நினைத்து சுற்றிவந்த காட்டு யானை!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை விசித்திரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் குறித்த யானை, சிலைக்கு அருகில் வந்த ஓரளவு வளர்ந்த இளம் காட்டு யானையொன்று, சிலையை விட்டு நகராமல் பல மணி நேரமாக அதனைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

யானையின் இந்த விசித்திரமான நடத்தையை அவதானித்த அப்பகுதி மக்களும், அவ்வழியாகச் சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம் யானை, தூரத்தில் தென்பட்ட யானை சிலையை தனது தாய் அல்லது கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு யானை என தவறாகக் கருதியிருக்கலாமா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், நகரை அண்மித்த பகுதியில் இளம் காட்டு யானையொன்று தனியாக நடமாடுவது அந்த யானைக்கும், அப்பகுதி மக்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, யானையை பாதுகாப்பான முறையில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அல்லது பொருத்தமான பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித–யானை மோதல் அதிகரித்து வரும் நிலையில், கூட்டத்திலிருந்து பிரிந்திருக்கக்கூடிய ஒரு காட்டு யானை செயற்கையாக உருவாக்கப்பட்ட யானை சிலைக்கு அருகில் நீண்ட நேரம் தங்கியிருக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post