ரஸீன் ரஸ்மின்
புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி மற்றும் மலேஷியாவின் சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழகம் (Universiti Sultan Zainal Abidin – UniSZA) ஆகிய இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் கல்வி மேம்பாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (24) இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி சாமில் கேட்போர் கூடத்தில் வைபவரீதியாக இடம்பெற்றது.
இவ் ஒப்பந்தத்தில், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி சார்பில் அதன் முகாமைத்துவ சபை தலைவர் எச். அஜ்மல் (MBA) மற்றும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம். ஏ. எல். எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி, MHRMC) ஆகியோரும் மலேஷியாவின் சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழகம் சார்பில் இஸ்லாமிய, சமகால கற்கைகள் (Faculty of Islamic Contemporary Studies) பீட பிரதி பீடாதிபதி கலாநிதி அமான் தாய்மா முஹம்மது செய்ன் மற்றும் பேராசிரியர் கலாநிதி முஹம்மத் அத்தராஹிம் ரசாலி ஆகியோர் இதன்போது கைச்சாத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்த்த்தின் மூலம் "பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு (Undergraduate & Postgraduate) கற்கைநெறிகளில் சேர்க்கை வாய்ப்புகள்", "விரிவுரையாளர் வாண்மைத்துவ மற்றும் தொழில்முறை பயிற்சிகள்", " மாணவர்களுக்கு உள்ளக (Students Industrial Internship Programe) தொழில்முறை பயிற்சிகள்", " கல்வி, பண்பாட்டு மற்றும் ஆய்வுப் பரிமாற்றம்", "அல்குர்ஆன் மனனத்திற்கான சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கல்" போன்ற பல்வேறுபட்ட கல்வி முன்னேற்ற வாய்ப்புகளை இரு நிறுவனங்களுக்கும் வழங்கும்.
இரு தரப்பினருக்குமிடையில் கல்வி, ஆய்வு மற்றும் பயிற்சி துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட ஒப்பந்தமாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் முகாமைத்துவ சபை தலைவர் எச். அஜ்மல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலேஷியாவின் சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம். ஏ. எல். எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி, MHRMC) உட்பட இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹ்மட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, நீர் வழங்கல், வடிகாலமைப்பின் ஓய்வுநிலை மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல் உட்பட கல்லூரி விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், கல்வியியலாளர்கள், பிரமுகர்கள், மாணவியர், பழைய மாணவியர் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் (MoU) இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி தனது மாணவிகளுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் மற்றுமொரு முக்கிய நகர்வை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.