ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு நிகரான தலைவர் எவரும் தற்போது இல்லையென, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்னும் 10 – 12 வருடங்கள் நாட்டை அவர் நிர்வகித்தால், இலங்கை மக்கள் உலகில் பலம் வாய்ந்தவர்களாக மேம்படுவார்களென்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்:
இத்தருணத்தில் நாட்டு மக்கள் மிகவும் கவனமாக சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
தேசிய கொள்கைகளின் கட்டமைப்புக்குள் தெளிவான பயணத்தை ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். சகல கட்சிகளையும் மக்கள் கடந்த 03 அல்லது நான்கு வருடங்களில் மக்கள் நிராகரித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப் படவில்லை.நிலையான தேசிய கொள்கைக் கட்டமைப்பைத் தொடர முடியாததால், நாட்டில் ஒரு பாரதூரமான அவல நிலை ஏற்பட்டுள்ளது. 2048 ஆம் ஆண்டு வரை, நிலையான தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் நாடு முன்னெடுக்கப் பட்டால் எதிர்கால சந்ததியினர் நன்றாக பயன்களை அனுபவித்திருப்பர். வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டை, இன்னும் ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி வழமைக்கு கொண்டுவருவார் என்றும் தெரிவித்தார்
