புத்தளம் - கரம்பை பகுதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி - கரம்பையைச் சேர்ந்த முத்து தம்பி இராமநாதன் (வயது 42) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த நபர் இரவு நேர சாப்பாடு எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கரம்பை உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற போது பாலாவியிலிருந்து நுரைச்சோலை நோக்கிப் பயணம் செய்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் உயிரிழந்த நபரின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.
மேலும், குறித்த நபரின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என தீர்ப்பு வழங்கி, சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைத்தார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.