ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற காலத்தில் இருந்து முழு உலகையும் வலம் வருகிறார். இலங்கையில் எந்த தலைவர்களும் இவ்வாறு உலகை சுற்றவில்லை. மரண வீட்டுக்கு செல்கிறார். திருமண வீட்டுக்கு செல்கிறார். அல்லது உலக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குபற்றாத மாநாடுகளில் உரையாற்றுகிறார்.
முழு உலகையும் சுற்றிவிட்டு மீண்டும் உலகம் சுற்ற 2000 இலட்சம் ரூபா கேட்கிறார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க கடுமையாக சாடினார்.
நாமல் ராஜபக்ஸவுக்கு எவ்வாறு அரச இல்லத்தை வழங்க முடியும். ராஜபக்ஸர்கள் இன்றும் அரச இல்லங்களில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பது இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, நிதி ஒழுக்கம் பற்றி அரசாங்கம் பாடம் கற்பிக்கிறது. இவர்களின் நிதி ஒழுக்கத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம். ரெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரச முயற்சியாண்மை திணைக்களத்திற்கு 13 ஆயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 13 ஆயிரம் இலட்சம் ரூபா எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவியுங்கள். இதில் நிதி ஒழுக்கம் உள்ளதா?
இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஜனாதிபதியின் மேலதிக செலவுகளுக்காக 2,000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 2,000 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
வரவு செலவு திட்டத்தின்போது ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகனங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கான செலவினங்கள் நாட்டுக்கு பாரிய சுமை என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக 2,000 இலட்சம் ரூபாவை ஒதுக்க குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனாதிபதி நிதி ஒதுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற காலத்திலிருந்து முழு நாட்டையும் வலம் வருகிறார். இலங்கையில் எந்த அரச தலைவர்களும் இவ்வாறு உலகை சுற்றவில்லை. மரண வீட்டுக்கு செல்கிறார். திருமண வீட்டுக்கு செல்கிறார். அல்லது உலக நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றாத மாநாடுகளில் உரையாற்றுகிறார். முழு உலகையும் சுற்றிவிட்டு மீண்டும் உலகம் சுற்ற 2,000 இலட்சம் ரூபாய் கேட்கிறார்.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கும், சீருடை வழங்குவதற்கும் மானியம் ஒதுக்கப்படவில்லை. பரீட்சை வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. ஆனால், ஜனாதிபதி உல்லாச பயணம் செல்ல 2,000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றம் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும்.
பாடசாலை உபகரணத்திலிருந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் வரை வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி வருமானத்தை பெற்றுக்கொண்டு ஜனாதிபதி உலகை சவாரி வருகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வரும்போது மஹிந்த ராஜபக்ஸ விஜேராம மாவத்தையிலிருந்து பாராளுமன்றத்திற்கு வரும்போது இவர்களின் வாகன பேரணியுடன் அம்பியூலன்ஸ் வண்டி வருகிறது. இவர்கள் படுக்கை நோயாளிகளா? ஆனால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அம்பியூலன்ஸ் இல்லை. இவ்வாறான செயற்பாடுகளின்போது மக்கள் எவ்வாறு திருப்தியுடன் வரி செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழமுடியும். நாமல் ராஜபக்ஸ அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரது தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள். வெட்கமில்லையா? நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும். முடிந்தால் பாராளுமன்றத்தில் குறிப்பிடுங்கள்.
கப்பலில் களியாட்டம் நடத்தியது தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீட்டர் தூரம் கூட கண் தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில் சென்றார்களாம். யாரை ஏமாற்றுகின்றீர்கள். நாட்டு மக்களின் இரத்தத்தை உறுஞ்சும் வகையில் வரியை அதிகரித்துவிட்டு அரச நிதியை மோசடி செய்கிறீர்கள்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன? ஏன் மேலதிகமாக 2,000 இலட்சம் ரூபா குறைநிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகிறது என்பதை பாராளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.
நன்றி: Veerakesari
