உடப்பு - பூனைப்பிட்டியில் வர்த்தகரின் வீட்டை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை...!

எம்.ஏ.ஏ.காசிம், ரஸீன் ரஸ்மின்

புத்தளம், உடப்பு - பூனைப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 70 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன இன்று (25) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்ட சமயத்தில் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் மற்றும் இறால் விற்பனையில் ஈடுபட்டு வரும் அந்த பிரதேசத்தில் பிரபல வியாபாரியொருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த வர்த்தகர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நேற்றிரவு பூனைப்பிட்டி பகுதியில் உள்ள லூசியா ஆலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு விஷேட நத்தார் ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இன்று (25) அதிகாலை மீண்டும் வீட்டுக்கு வருகை தந்து பார்த்து போது, வீட்டில் உள்ள பொருட்களை அங்கும், இங்குமாக வீசப்பட்டிந்ததுடன், வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் என்பனவும் திருடப்பட்டிருப்பதை உணர்ந்துகொண்டதன் பின் இதுபற்றி வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உடப்பு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தம்மிக குலதூங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரும், பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் அங்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் மேற்படி திருட்டில் ஈடுபட்டிருப்பது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும், கை ரேகை பரிசோதனை பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸாருடன் இணைந்து, பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post