புத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு...!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

வன்னாத்தவில்லு, எட்டாம் கட்டை கரடிப்பூவல் பகுதியைச் சேர்ந்த ரணசிங்க ஆராச்சிலாகே சுனில் பிரேம (வயது 57) எனும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், திருமணம் முடிக்காமல் வயோதிப பெண் ஒருவருடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்  தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையிலேயே இவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உருக்குலைந்து, அழுகிய நிலையில் சடலமொன்று கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வன்னாத்தவில்லு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

குறித்த நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் எனவும், சடலம் அடையாளம் காண முடியாத வகையில் அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், சடலத்தின் கை மற்றும் கால் பகுதிகள் உட்பட சில உடல் அவயங்களை மிருகங்கள் சாப்பிட்டிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை முன்னெடுத்தார்.

அத்துடன், அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்பட்ட குறித்த நபரின் சடலத்தை, திருமணம் முடிக்காமல் அவரோடு வாழ்ந்துவந்த வயோதிப பெண் அடையாளம் காட்டினார்.

அதனையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை மகனிடம் ஒப்படைக்குமாறும் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post