ரிபாக்,எம்.ஏ.ஏ.காசிம்
மதுரங்குளி 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ATM இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடுத்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று 10 நாட்களுக்குள் மதுரங்குளி பொலிஸாருடன் இணைத்து, புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான குற்ற விசாரணை பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்கள் கொள்ளைடித்த பணத்தையும் மீட்டுள்ளனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மீதமுள்ள 92 லட்சத்து 77 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது, கொள்ளைடித்த பணத்தில் குறித்த மூவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 7ஆம் ம் திகதி இரவு, தனியார் வங்கி ஒன்றுக்கு சொந்தமான தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரத்தின் பராமரிப்பு பணியாளர்கள் போல் நடித்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில், மிகவும் தந்திரமாக திறப்பு ஒன்றினால் குறித்த ஏ.ரி.எம். இயந்திர பிரதான கதவை திறந்து, உரிய ரகசிய எண்களை பயன்படுத்தி, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பிரிவுக்கு பொறுப்பான குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற 10 நாட்களுக்குள் மேற்படி கொள்ளைச் சம்பவத்திற்கு தலைமை தாங்கிய இரண்டு பிரதான சந்தேக நபர்களும் , அவர்களுக்கு உதவியாக இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் வங்கியின் பாதுகாப்பு மற்றும் பண பரிவர்த்தனைக்கு பொறுப்பான தனியார் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்த இருவரும் , அநுராதபுரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு நபர் ஒருவருமே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு புத்தளம் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் ஆலோசனையின் பேரில், புத்தளம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ.ரூபசிங்க, ஆனமடுவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த குமார, புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர். ஏ. சந்திரசிறி லால் மற்றும் மதுரங்குளிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி விக்கிரமசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
