கற்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி - இருவர் காயம்

சாஹிப், ரிபாக்

புத்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கெப் வண்டியொன்றும்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி - மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் சம்மட்டிவாடி பகுதியில் இன்று வியாழக்கிழமை (27) காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கற்பிட்டியிலிருந்து மன்னார் நோக்கிப் பயணம் செய்த இலங்கை போக்குவரத்துக்குச் சபை மன்னார் சாலைக்கு சொந்தமான பஸ்ஸுடன், பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கிச் சென்ற கெப் வண்டி ஒன்றும்  மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது கெப் வண்டியில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளானதுடன், அங்கிருந்தவர்களால் அவ்விருவரையும் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, மேலதிக சிகிச்சைக்காக கெப் வண்டியின் சாரதி சிலாபம் வைத்தியசாலைக்கும், சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த மற்றையவர் குருநாகல் வைத்தியசாலைக்கும் உடனடியாக மாற்றப்பட்ட போதிலும், கால் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன், அவரின்  நிலைமையும் கவலைக்கிடமான உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கு உள்ளான பஸ்ஸின் சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும்,  பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளுக்கு  எந்தவித காயமும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்வம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Post a Comment

Previous Post Next Post