சமுர்த்தி தருவதாக கூறி ஒரே நாளில் 30 பேரிடம் பண மோசடி


யாழ். நிருபர்

யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனியே இருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து பண மோசடிகள் இடம்பெற்றுள்ளன. 

நேற்று முன்தினம் வியாழக்கிழமை மட்டும் 30க்கும் மேற்பட்டவர்களிடம் இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்ற நபரொருவர், தான் அப்பகுதிக்கு  புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடுகளுக்குள் சென்று சமுர்த்தி உதவிகளை பெற பதிவு செய்ய வேண்டாமெனவும் அதற்காக பணம் செலுத்த வேண்டாமெனவும் கூறி 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் பெற்று மோசடி செய்துள்ளார்.

அப்பகுதிகளிலுள்ள வீடுகளில் பிள்ளைகள் வேலைகளுக்கு சென்ற பின்னர், வீடுகளில் தனித்திருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து வீடுகளுக்குள் சென்று ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.

சிலர் அது தொடர்பில் பிள்ளைகளுடன் பேசி பணம் வாங்க வேண்டாமெனக் கூறிய போது , தொழிலுக்குச் சென்ற பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம். நான் நாளை வருகிறேனெனக் கூறி அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார். 

சில வீடுகளில் தம்மிடம் அவ்வளவு தொகை இல்லை என்றவர்களிடம், உங்களிடம் உள்ளதை தற்போது தந்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள், மிகுதியை நான் நாளைக்கு வாங்குகிறேன். இல்லையெனில், எனது அலுவலகத்துக்கு வந்து மிகுதியை தாருங்கள் என கூறி பணத்தை பெற்றுள்ளார்.

அத்துடன் ‘சமுர்த்தி கொடுப்பனவு" என விண்ணப்பப்படிவம் ஒன்றினையும் வழங்கி அதனை பூரணப்படுத்தி, அவர்களிடம் கையொப்பமும் வாங்கியுள்ளார். இம்மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post