ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பிரதேச சபைக்குற்பட்ட ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் உள்ள பிரதான வடிகான்கள் மற்றும் பாலங்கள் என்பன துப்புரவு செய்யும் விசேட பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் பிரதேச செயலாளரின் ஊடாக பிரதேச சபை தலைவரின் வழிகாட்டலுடன், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் ஆசிரியரின் தலைமையில் மேற்படி வெள்ளம் வழிந்தோடும் வடிகால் மற்றும் பாலங்கள் என்பன சுத்தம் செய்யப்பட்டன.
ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கிலும், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்கங்கள் மற்றும் வெள்ள அபாயங்களைத் தடுக்கும் நோக்கிலும் இத்துப்பரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளை முன்னெடுப்பதற்கு ரத்மல்யாய பிரஜா சக்தி உறுப்பினர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சமூக மட்ட அமைப்பின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.
இதன் மூலம் பிரதான வடிகான்களில் தேங்கியிருந்த குப்பைகள், சேறு மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, நீர் சீராக ஓடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

