சாஹிப், ரஸ்மின்
சிலாபம் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில் நேற்று (21) இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் - காக்கப்பள்ளி சந்தியில் உள்ள முடி வெட்டும் நிலையத்திற்குச் சென்ற சிறுவன் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், குறித்த காணொளி தொடர்பில் சிலாபம் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்டதாக கூறப்படும் குறித்த சிறுவனிடம் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், இச்சம்பவம் கடந்த வருடம் ஆகஸ்ட் அளவில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சிலாபம் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை சிலாபம் காக்காப்பள்ளி மற்றும் பண்டாரவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 58 மற்றும் 54 வயதுடையவர்கள் என்றும் இவர்கள், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
