மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு - மதுரங்குளியில் சோகம்..!


ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்

புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சமீரகம பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளதாக  மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி - சமீரகம பகுதியைச் சேர்ந்த முஹம்மது ரஸ்மின் முஹம்மது ரஜாத் (வயது 16) எனும் மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மாணவன் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பதுடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றவிருந்தார்.

சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை (01) குறித்த மாணவன், தனது மூத்த சகோதரருடன் மீன் பிடிப்பதற்காக அருகில் உள்ள குளம் ஒன்றுக்கு சென்றுவிட்டு, மாலை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தனது வீட்டில் உள்ள பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்த தந்தை, அங்கு இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்டிருந்த போகஸ் லைட்டை சரிசெய்யுமாறு வெளியே சென்றுவந்த தனது இளைய மகனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த மாணவன் போகஸ் லைட்டை சரிசெய்ய முற்பட்ட போது, மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த மாணவனை சிகிச்சைக்காக புத்தளம் மள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார்.

மேலும், குறித்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post