(அரபாத் பஹர்தீன், இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)
காலநிலை மாற்றத்தினால் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தீர்வுகள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகமும்,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் இணைந்து கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கண்காட்சி ஒன்றினை சனிக்கிழமை (7) ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.
இக் கண்காட்சி நிகழ்வின் போது பத்து தலைப்புகளில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள பெண் சுயதொழில் முயற்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் சவால்களையும், அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பான செயல்முறையினையும் 40 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தமது சிறந்த சித்திரங்களில் மூலமாக வரைந்து, அச் சித்திரங்கள் மூலமாக விரிவான விளக்கத்தினையும் கொடுத்திருந்தனர்.
அத்துடன் காலநிலை மாற்றத்தின் காரணமாக வாழ்வாதாரத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது போன்று மீன் பதனிடல் விவசாயம் , சூரிய ஒளி இல்லாத காலத்தில் எவ்வாறு மாற்று மின்சாரத்தை பயன்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதன் போது அவர்களுக்கு விரிவுரையாக முன் வைக்கப்பட்டது.
விசேடமாக நிலைபெறான நீர் முகாமைத்துவ மூலம் மலர் வளர்ப்பு தொழிலில் பெண்களை வலுவூட்டுவது மிக முக்கிய விடயமாக இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.
அதேபோல் வறட்சி மற்றும் தரிசு நிலத்தை எவ்வாறு சுயதொழில் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது என்கின்ற விடயமும் மழைநீர் சேகரிப்பின் மூலம் எவ்வாறு சுய தொழில் முயற்சிகளுக்கு நீரினை பயன்படுத்துவது தொடர்பிலும் இங்கு விசேட விளக்கம் அளிக்கப்பட்டது.
இதே வேளை சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கியுடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தி நிதிகளை இலகுவாக பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
வெப்பமான காலநிலையில் தும்பு தொழிலில் பணிபுரியும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் அவற்றை நேர் மறையான தாக்கத்தை விளக்கப்படுத்தி இயந்திரம் புதிய கட்டிட கட்டுமானம்,மின்சாரத்திற்கான சோலார் பேனல்கள் மற்றும் வெப்பத்தை தணிப்பதற்கான விசிறிகள் இவை தொடர்பிலும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் உள்ளூராட்சி மன்றத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சேதன கழிவுகளில் இருந்து உயிர் வாயுவை எவ்வாறு உருவாக்குவது அது போன்று பசலைகளை நச்சுத்தன்மை அற்ற முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலும் இந்த கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலாத்துறையில் பெண்களின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்ப பங்களிப்பு தொடர்பிலும் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பெரு முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் சுற்றுலா துறையை ஈர்க்கும் வகையில் வடிவமைப்பதற்கு வணிக வங்கிகளின் பங்களிப்பின் அவசியம் தொடர்பிலும் இதன் போது குறிப்பிடப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளர்களான கொழும்பு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி ரஞ்சன பியாதாச, பேராசிரியர்
சாமினி ஹேமச்சந்திர ஆகியோருடன் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ரஞ்சித் புண்ணியவர்தன, காலநிலை அவதான நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரோஷான் ஹெரத் ஆகியோர் இதன் போது பிரசன்னமாக இருந்தனர். மேலும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கிகளின் ஊழியர்கள் ஆகியோருடன் பெருந்திரளான கற்பிட்டி பிரதேச பெண் சுயதொழிலாளர்களும், முயற்சியாளர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.