ரஸீன் ரஸ்மின்
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (அப்துல்லாஹ் ஹஸரத்) இன்று திங்கட்கிழமை (13) மாலை காலமானார்.
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் புத்தளத்தில் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்க நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.
மூவின சமயத் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்த இவர், மூவின மக்களினால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிராகவும், உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கையின் போது இவரும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பினையும் தெரிவித்திருந்தார்.
மாத்திரமன்றி, பலஸ்தீன மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் இவர் கலந்துகொண்டு குரல் கொடுத்திருந்தார்.
புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி 140 வருடங்களைப் பூர்த்தி செய்து இலங்கையில் பழமை வாய்ந்த அரபுக்கல்லூரி என்ற பெயரை நாட்டில் பதித்துள்ளது. இந்த நீண்ட வரலாறு அதிகமானோருக்கு மறந்திருக்கிறது.
உண்மையிலேயே காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் பாடத்திட்டம் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாகத்தான் இக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்தும் அங்கு உயர்கல்வி கற்பத்தற்காக தெரிவு செய்யப்படுகிறார்கள்.
சிறந்த ஆளுமை மிக்க உலமாக்களை உருவாக்குவது முதல் சமூகம் சார்ந்த விடயங்களை மார்க்க ரீதியாக கையாளுவதிலும் மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹஸரத் இறுதி வரை முன்னெடுத்திருந்தார்.
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (காசிமி,மதனி) தனது அதிபர் பதவி சேவையிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
அன்னாரின் 34 வருட தொடர் சேவையை பாராட்டி கல்லூரி பழைய மாணவர் அமைப்பாகிய “சில்சிலதுல் காசிமிய்யீ” அமைப்பு அதன் வருடாந்த அங்கத்தவர் பொதுக் கூட்டத்தின்போது அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது.
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள், புத்தளம் நகரில் கல்விக்கு ஒளி கொடுத்த நாடறிந்த மூத்த உலமா மஹ்மூத் ஹஸரத் அவர்களின் புதல்வராவார்.
சில காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த இவர் கடந்த 8 ஆம் திகதி புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்க பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (13) மாலை காலமானார்.
அன்னாரது ஜனாஸா இன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக கொழும்பு குப்பியாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டு, பின்னர் புத்தளத்தில் அன்னாரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
அத்துடன், நாளை (14) பகல் 2 மணி முதல் 3.30 வரை மத்ரஸதுல் காசிமிய்யாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு அஸர் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் மஸ்ஜிதில் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.