மகனை பஸ்ஸில் ஏற்றுவதற்காக காத்திருந்த தந்தை கார் மோதி பரிதாபமாக உயிரிழப்பு; மதுரங்குளியில் சோகம்...!


சாஹிப், முஹம்மட் ரிபாக் ||

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் இன்று (09) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளி , புபுதுகம பகுதியைச் சேர்ந்த 47 வாத்திய குடும்பஸ்தர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் பகுதியை நோக்கிப் பயணித்த சொகுசு கார் , வீதியோரத்தில் நின்ற நபர் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மநுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தனது மகனை பஸ்ஸில் ஏற்றுவதற்காக குறித்த நபர் தனது வீட்டிக்கு முன்னால் வீதியோரத்தில் நிற்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

எனினும், தந்தைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மகன் அதிஷ்டவசமாக எவ்விதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சொகுசு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியோரத்தில் நின்ற குறித்த நபர் மீது மோதியுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் களனி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post