ரஸீன் ரஸ்மின்
புத்தளம் , கிராமிய அபிவிருத்தி நிறுவனம் ( RDF) ஏற்பாடு செய்த மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் எனும் தலைப்பிலான இரண்டாம் கட்ட முழுநாள் விஷேட செயலமர்வொன்று இடம்பெற்றது.
கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.ரமீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் திட்ட இணைப்பாளர் ஆர்.ரிகாஸ் மற்றும் எம்.எச்.எப்.ஹஸ்மிதா ஆகியோருடன் வளவாளர்களாக எஸ்.நிசாதி பிரமோத்ய, ஆயிஷா பானு, ஈ.ஜே.ஜே.பவித்ரன், ரி.என்.பிரசீதா ஆகியோர் கலந்திகொண்டனர்.
இந்த செயலமர்வில் பாலாவி ரத்மல்யாய மற்றும் கருவலகஸ்வெவ பகுதிகளைச் சேர்ந்த வயது, சமயம் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, எமது அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் , உரிமைகளையும் பின்பற்றும் போது அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றி இந்த செயலமர்வில் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான மனித உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசியலமைப்பில் அத்தியாயம் 3 இல் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை முன்வைத்து அதுதொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தமது கிராமங்களில் உள்ள சமய ரீதியிலான பிரச்சினைகளை இனங்கண்டு அதுதொடர்பில் குழுச் செயல்பாடுகள் மூலம் தொகுக்கப்பட்டு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு, சமத்துவம் மற்றும் ஒப்புறவு தொடர்பிலும் பயன்பாட்டுக்கான உதாரணங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டதுடன், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் தங்களது இலட்சியத்தை அடைவதற்கு தடையாக காணப்படும் காரணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







