எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தீர்மானிப்பதற்கு முன்னர் எமது நாட்டினுடைய பொருளாதாரப் பிரச்சினைகளையும் இன பிரச்சினையையும் யாரால் தீர்க்க முடியும் என்பதை சரியாக ஆராய்ந்து பின்னர் நாங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற "இலட்சிய அரசியலுக்கான தேசிய இயக்கம்" என்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாம் இதுவரை எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்றும் அனைத்து தரப்பினதும் கொள்கைகளை கேட்டறிந்ததன் பின்னர் நாட்டிலுள்ள இனப் பிரச்சினைகளை தீர்த்து பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் சிறந்த வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர அவர்களின் தலைமையில் "இலட்சிய அரசியலுக்கான தேசிய இயக்கம்" எனும் அரசியல் கட்சிகளின் கூட்டணி சார்பில் நடைபெற்ற 2024 தேர்தல் சம்பந்தமான கூட்டத்திற்கு கூட்டணியின் ஏற்பாட்டாளர் ரன்ஜித் பீரிஸ் அவர்களின் அழைப்பை ஏற்று ஐக்கிய காங்கிரஸ் கட்சி கலந்து கொண்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களுடன் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மானும் கலந்து கொண்டார்.




