![]() |
| இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். |
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சக போட்டியாளரான பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பினை நடத்துவதற்கு பதில் செயலாளர் பா.சத்தியலிங்கத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.
இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
தலைவர் பதவிக்காக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 184 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.
