புத்தளத்தில் படகுகளுக்கு தீவைப்பு...!

ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்

புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திர படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் என்பனவற்றுக்கு இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளும், ஒரு பெரிய வள்ளம் என்பன முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரண்டு வள்ளம் பகுதியளவிலும் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நான்கு மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட மீன்பிடி இயந்திரப் படகுகள் , வள்ளங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களின் பெறுமதி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று 19 அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களும் இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post