வருங்கால மருமகளை துஷ்பிரயோகம் செய்த மாமனாருக்கு விளக்கமறியல்...!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கூலித் தொழில் செய்து வரும் தனது 18 வயது மகனுக்கு , 16 வயது நிரம்பிய சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக குடும்பத்தினர் தீர்மானித்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 18 வயதுடைய இளைஞன் தான் திருமணம் செய்துகொள்ள எதிர்பார்த்து இருக்கும் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அத்துடன், அந்த இளைஞனின் தாயும் கர்ப்பமாக இருந்ததால், தனது தாயை சில நாட்களாக மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் இளைஞனின் தந்தை, அந்த சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தான் தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சிறுமி, தான் திருமணம் முடிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் அந்த இளைஞரிடம் கூறியுள்ளார்.

பின்பு சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர் ஆனமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (07) ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post