அஸ்லம் எஸ் மெளலானா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிட்டுள்ளது.
இதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான புதிய பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா நியமனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
இதை ஆட்சேபித்து அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (06) வழங்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, நஸீர் அஹ்மட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வரிதக்கி, அத்த வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட அலிசாஹிர் மௌலானவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் திணைக்களத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக மு.காவின் செயலாளர் நாயகம் நிசாம் தெரிவித்துள்ளார்.
