"ஆசனத்தை கண்டதும் கண் கலங்கி போனேன்" - புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஷதா பாயிஸ் உருக்கம்!


எம்.யூ.எம்.சனூன்

எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ், சிங்கம் போல அந்தக் கதிரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் என் கண் முன் தோன்றி, அவர் புத்தளம் நகருக்கு செய்த சேவைகள் யாவும் நினைவில் நிழலாடி கண்ணீரையும் வரவழைத்ததாக புத்தளம் மாநகர சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் புதல்வியுமான ஷதா பாயிஸ் மனம் உருகி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

புத்தளம் மாநகர சபையின் புதிய மேயராக ரின்சாத் அவர்களும், பிரதி மேயராக நுஸ்கி நிசார் அவர்களும் உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் நிகழ்வில் அழைக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினர் என்ற வகையில் நானும் கலந்துகொண்டு இருவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

அங்கு அந்த மேயர் அறைக்குள் நீண்ட காலத்திற்குப் பின் உள் நுழைந்த போது கவலை கலந்த நினைவுகளை உள்ளத்தில் மீட்டிப் பார்த்தேன். 

எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் சிங்கம் போல அந்தக் கதிரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் என் கண் முன் தோன்றி கண்ணீரையும் வரவழைத்தது.

இந்த நகரை அழகு படுத்தி, கட்டிக் காத்த எனது தந்தையின் கனவுகளை முழுமைப்படுத்த முடியாமலேயே அவர் காலஞ் சென்றதை நினைத்தும், அவர் உயிரோடு இன்று இருந்திருந்தால் மீண்டும் அந்த அரியாசனத்தை ஒரு வேளை தன் வசப்படுத்தியிருப்பார் என்றும் நினைத்து வருந்தியவளாய் அந்த இடத்தில் அமர்ந்திருந்தேன்.

புதிய மேயர், புதிய பிரதி மேயர், நான் உட்பட ஏனைய புதிய உறுப்பினர்கள் என அனைவரும் எனது தந்தை கம்பீரமாய் உருவாக்கிய இந்த நகரை மேலோங்கச் செய்ய திறம்பட உழைப்போம் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் வரவழைத்து உறுதி பூண்டேன்.

அத்தோடு ஒரு மாநகர சபையின் உறுப்பினராய், ஒரு தலைவனின் புதல்வியாய், மக்கள் சேவகியாய் என்னாலான அத்தனை நல்ல விடயங்களையும் விடாமுயற்சி கொண்டு செய்து முடிப்பேன் என்கிற உறுதியை பூண்டிருக்கும் எனக்கு உங்கள் பூரண ஆதரவை நல்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறினார்.

புத்தளம் மாநகர சபை செயலாளர் கீதானி ப்ரீதிகாவுடனும் மாநகர சபை உறுப்பினர் ஷதா பாயிஸ் கலந்துரையாடினார்.

Post a Comment

Previous Post Next Post