மௌலவி ஆசிரியர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் - அப்துல்லாஹ் ஹஸரத் கோரிக்கை

சாஹிப்

புறக்கணிக்கப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர் நியமனங்கள்,காலம் தாழ்த்தாது மீண்டும் வழங்கப்பட வேண்டும் என புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும் , புத்தளம் மாவட்ட உலமா சபை தலைவருமான அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கோரிக்கை விடுத்தார்.

புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவிலிருந்து இவ்வாண்டு மதீனா சர்வதேச இஸ்லாமிய பல்கழைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 8 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (14)  மத்ரஸா மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு விஷேட உரையாற்றும் போதே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

காஸிமிய்யா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் உலமாக்கள், கல்வியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகத்துறை சார்ந்தோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அவர்  மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது,

இலங்கை அரபு மத்ரஸாக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு காலத்துக்கு தேவையான வகையில் 

மறுசீரமைப்புக்கான காத்திரமான பணிகள் முன்னைய காலங்களை விட தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது பாராட்டுக்குறியதும் வரவேற்கத்தக்கதுமாகும்.

இப்படியான இந்த கட்டத்திலாவது மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புக்களையும் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புங்களும் முன்னெடுக்க வேண்டும் என்றார். 

இதன்போது, உயர் கல்விக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post